இரட்டைத்தாயின் ஒற்றைக் குழந்தை - நூலகவியலாளர் என்.செல்வராஜா



இலண்டனில் இருந்து இயங்கும் ஐ.பீ.சீ. அனைத்துலக ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் சர்வதேச ஒலிபரப்பில் பிரதி ஞாயிற்றுக்கிழமை தோறும் பிரித்தானிய நேரம் காலை 07.00 முதல் 10.00 வரை ஒலிபரப்பப்படும் “காலைக்கலசம்” நிகழ்ச்சியில் “இலக்கியத் தகவல் திரட்டு” என்ற பகுதி காலை 7.15 முதல் 8.00மணி வரை சுமார் 15-20 நிமிடங்கள் ஒலிபரப்பாகின்றது. நூலகவியலாளர் என்.செல்வராஜா அவர்களால் தொகுத்து வழங்கப்படும் இந்த வாராந்த நிகழ்ச்சியின் எழுத்துப் பிரதி இதுவாகும்.

சிந்தனை வட்டத்தின் 100வது வெளியீடாக வெளிவந்துள்ள இரட்டைத் தாயின் ஒற்றைக் குழந்தை என்ற நூலை பார்ப்போம்.

கிழக்குமாகாணத்தின் கல்முனை – சாய்ந்தமருதுவை பிறப்பிடமாகக் கொண்ட கலைமகள் ஹிதாயா ரிஸ்வி அவர்களும், தென் மாகாணத்தில் காலி – கட்டுகொடையைப் பிறப்பிடமாகக் கொண்ட மஸீதா புன்னியாமீன் அவர்களும் இணைந்து எழுதியுள்ள இக்கவிதைத்தொகுப்பில் சுமார் 59 கவிதைகள் இடம்பெற்றுள்ளன. இவ்விரு கவிஞர்களும் இலங்கையின் தமிழ் ஊடகங்களின் வழியாக இலக்கிய உலகில் நன்கு பரிச்சியமானவர்கள். பல நூல்களைத் தத்தம்பெயரில்  வெளியிட்டவர்கள்.

உடத்தலவின்ன மடிகேயிலுள்ள சிந்தனை வட்டம்,  இரட்டைத் தாயின் ஒற்றைக் குழந்தை என்ற இந்த நூலின் 1வது பதிப்பினை ஏப்ரல் 2000இல் வெளியிட்டுள்ளது. 154 பக்கங்கள்,  மற்றும் சித்திரங்கள், கொண்ட இந்நூலின் விலை: ரூபா 100. என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தக் கவிதை நூலில் அவதானித்த ஒரு குறிப்பிடத்தகுந்த விடயம் என்னவென்றால்,  இதில் இடம்பெற்றுள்ள கவிதைகளில் எவை கலைமகள் ஹிதாயா ரிஸ்வியின் படைப்புக்கள், எவை மஸீதா புன்னியாமீன் அவர்களின் படைப்புக்கள் என்று வேறுபடுத்திக்கண்டறியமுடியாமல் உள்ளதாகும். மீண்டும் நூலின் தலைப்பினை வாசித்தேன். இரட்டைத் தாயின் ஒற்றைக் குழந்தை என்ற பெயர் இதற்காகத்தான் தரப்பட்டுள்ளதோ என்று கருதுகின்றேன்.

இலங்கையில் தமிழ் இலக்கிய வரலாற்றில் முஸ்லீம் பெண் எழுத்தாளர்களின் படைப்புக்கள் விரல்விட்டெண்ணக் கூடியனவாகவே உள்ளன. இளம் வயதில் சில பெண் எழுத்தாளர்கள் வேகத்துடன் பத்திரிகைகளில் கவிதைகளைப் படைத்திருந்த போதிலும், காலப்போக்கில் அத்துறையைக் கைவிட்டவர்களாகவே பெரும்பாலான முஸ்லீம் பெண் எழுத்தாளர்கள் காணப்படுகின்றார்கள். 1980க்கு முன்னைய காலங்களோடு ஒப்பிடும் போது, 80களுக்குப் பின் இந்தப்போக்கில் பாரிய மாற்றம் காணப்படுவதை நாம் அவதானிக்க முடிகின்றது. 80களுக்குப் பின்னர் வளர்ச்சிகண்ட பெண் எழுத்தாளர்களில் கலைமகள் ஹிதாயா ரிஸ்வி அவர்களும்.  மஸீதா புன்னியாமீன் அவர்களும் குறிப்பிடத்தக்கவர்களாவார்கள்.

இரட்டைத் தாயின் ஒற்றைக் குழந்தை நூலில் இடம்பெற்றுள்ள 59 கவிதைகளும் புதுக்கவிதை சார்ந்தவை. பல கவிதைகள் கருத்தாழம் மிக்கவை. சமூக உணர்வுகளைத் தூண்டக்கூடியவை. அரசியல்ää பொருளாதாரம், கல்வி, சமயம்,  காதல் எனப் பல பக்கங்களையும் தொட்டுச் செல்பவையாக அவை அமைகின்றன. இரு பெண் கவிஞர்களின் படைப்புக்களைக் கொண்ட நூல் என்றவகையில் இயல்பாகவே இங்கு பெண்கள் தொடர்பான விடயங்களைக் கொண்ட கவிதைகள் இத்தொகுப்பில் முக்கியத்துவம் பெறுகின்றன. பெண்களின் பிரச்சினைகளை இனங் காட்டுபவையாகவும்,  பெண்களின் விழிப்புணர்வைத் தூண்டுவனவாகவும் அவை அமைந்துள்ளன. அதையடுத்து நாட்டின் போர்ச் சூழலைப் பின்னணியாகக் கொண்ட கவிதைகள் விளங்குகின்றன. இத்தகைய கவிதைகளில் சுமார் 10 கவிதைகள் இத்தொகுப்பில் இடம்பெறுகின்றன. நஷ்டஈடு,  பிறந்த மண், என் தேசமிது,  கூவி அழைக்கும் காகம்,  துளிர்விட்ட தேசம் போன்றவை இத்தகைய கவிதைகளில் சிலவாகும். இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ள ஓவ்வொரு கவிதையும் பொருத்தமான ஓவியங்களுடன்; பக்க வடிவமைக்கப்பட்டுள்ளன.

இரட்டைத் தாயின் ஒற்றைக் குழந்தை என்ற இந்த நூலில் சிந்தனைவட்டம் கடந்துவந்த பாதச்சுவடுகளை மீண்டும் நினைவுகூரும்வகையில் அதன் ஸ்தாபகர் பீ.எம்.புன்னியாமீன் அவர்கள் எழுதிய “சிந்தனைவட்டமும் நானும்” என்ற ஆவணப்பதிவினை முதலாம் பாகமாகவும்,  கலைமகள் ஹிதாயா ரிஸ்வி,  மஸீதா புன்னியாமீன் இருவரும் இணைந்தெழுதிய கவிதைத்தொகுதியை இரண்டாம் பாகமாகவும் கொண்டு வெளிவந்துள்ள இந்நூல் சிந்தனைவட்டத்தின் 100வது வெளியீடாகும். 100வது நூல் வெளியீடுவரை சிந்தனை வட்டம் வெளியிட்ட முழு நூல்விபரப்பட்டியலும் இந்நூலில் இறுதியில் இணைக்கப்பட்டுள்ளதும் ஒரு சிறப்பம்சமாகும்.

“சிந்தனை வட்டமும் நானும்” என்ற முதலாம் பாகத்தில் தமது வாழ்க்கையோடு சம்பந்தப்பட்ட பல விடயங்களையும் புன்னியாமீன் அலசியுள்ளார். பாடசாலை வாழ்வின்போது தன்னிடம் மறைந்து காணப்பட்ட எழுத்துத் திறனைத் தனக்கு இனம்காட்டிய ஐ.ஹாஜிதீன்,  யோ.பெனடிக்ட் பாலன் ஆகியோரை இதில் நன்றியுடன் நினைவு கூருகின்றார். தன் 19வது வயதில் “தேவைகள்” என்ற தனது முதலாவது சிறுகதைத்தொகுதி வெளிவந்தமையை பெருமையுடன்ää எழுத்தாளனுக்குரிய இயல்பான மகிழ்ச்சியுடன் எழுதியிருக்கிறார்.

இரட்டைத் தாயின் ஒற்றைக் குழந்தை என்ற இந்த நூலின் வெளியீட்டு நிகழ்வு, நவம்பர் மாதம் 2000ஆம் ஆண்டு கண்டி சிட்டி மிஷன் மண்டபத்தில் இடம்பெற்றிருந்தது. கண்டி சிட்டி மிஷன் மண்டபத்தில் மக்கள் கலை இலக்கிய ஒன்றியமும்,  சிந்தனை வட்டமும் இணைந்து இந்நூலை வெளியிட்டு வைத்திருந்தன. இந்த வெளியீட்டுவிழா நிகழ்வின் பதிவாக அன்றைய நிகழ்ச்சிகளின் தொகுப்பாக அமைந்த மற்றொரு நூல் பற்றியும் இப்பொழுது பார்ப்போம்.

அல்ஹாஜ் M.R.M.. ரிஸ்வி அவர்களைத் தொகுப்பாசிரியராகக் கொண்டு வெளிவந்த சுவடு என்ற நூலே அதுவாகும். உடத்தலவின்னை சிந்தனை வட்டம் வெளியிட்டுவைத்துள்ள 115வது நூலாக சுவடு என்ற இந்நூல் அமைந்துள்ளது. இதன் 1வது பதிப்பு ஜனவரி 2001இல் வெளியிடப்பட்டுள்ளது. கட்டுகஸ்தொட்ட J.J.Printers  அச்சிட்டுள்ள இந்நூல் 148 பக்கம் கொண்டதாகவும்,  ஏராளமான புகைப்பட ஆவணங்களைக் கொண்டதாகவும் தொகுக்கப்பட்டுள்ளது.

ஈழத்துத் தமிழ் இலக்கியவானில் ஒரு புதிய பரிமாணத்தின் சுவடு இதுவாகும் என்று நாம் கூறலாம். ஏனெனில்,  ஒரு நூல் வெளியீட்டு விழா நிகழ்வுகளையே ஆவணமாக்கும் ஒரு வித்தியாசமான முயற்சி இதுவாகும். 11.11.2000 அன்று கண்டியில் இடம்பெற்ற இந்நிகழ்வின் பின்னணியில் நூல்வெளியீடு மாத்திரம் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஈழத்தில் தமிழ் வளர்க்கும் காவலர்களை கொரவித்தல்,  ஏற்கெனவே ஒழுங்குசெய்யப்பட்ட தடாகம் சிறுகதைப்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு ஆகிய பல இலக்கிய நிகழ்வுகளும் அன்று இடம்பெற்றுள்ளன. இந்த இலக்கிய நிகழ்வில் கௌரவம் பெற்ற ஐவர் பற்றிய குறிப்புகளும் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. பிரபல எழுத்தாளரும் மல்லிகை சஞ்சிகையின் ஆசிரியருமான திரு. டொமினிக் ஜீவா,  பிரபல மூத்த பெண் வானொலி அறிவிப்பாளரான திருமதி இராஜேஸ்வரி சண்முகம், சுயாதீன தொலைக்காட்சிப் பணிப்பாளர்சபை உறுப்பினரான புரவலர் அல்ஹாஜ் ஹாசிம் உமர்,  பூபாலசிங்கம் புத்தகசாலை உரிமையாளரும் வெளியீட்டாளருமான திரு ஸ்ரீதர்சிங்,  பன்னூலாசிரியரும் கலாசார அமைச்சின் ஆலோசகருமான அல்ஹாஜ் எஸ்.எச்.எம். ஜெமீல் ஆகியோரே இந்நிகழ்வில் கௌரவிக்கப்பட்டவர்கள். இவை அனைத்தும் பற்றிய தகவல்களைத் தாங்கிய ஆவணத்தொகுப்பாக இந்நூலின் முதலாம் பகுதி அமைந்துள்ளது.

இரண்டாம் பகுதியில் சிந்தனை வட்டம் வெளியீடுகள் பற்றிய பட்டியல், சிந்தனை வட்டத்தின் பணிப்பாளர் புன்னியாமீன் அவர்களின் நூல்களின் பட்டியல், அவர் தனது துணைவியார் மஸீதா புன்னியாமீன் அவர்களுடன் இணைந்து வெளியிட்ட நூல்களின் பட்டியல் மற்றும்,  அவரது பேட்டி ஆகியன இடம்பெற்றுள்ளன.

Kalai Kalasam,  IBC Tamil 13.04.2004

இலக்கியப் பயணம்...

இலங்கையில் பிறந்து வாழும் நான் உள்ளத்தில் எழும் உணர்வுகளைக் கவிதை, கட்டுரை வடிவில் வழங்குவேன்.

மஸீதா